'காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர்’ - ஹமாஸ் அமைப்பு

By செய்திப்பிரிவு

காசா: காசா மீது இஸ்ரேல் நேற்று இரவு நடத்திய வான்வழி தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உணவு, குடிநீர், மின்சாரமின்றி காசா மக்கள் தவித்து வருகின்றனர். காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் 4 நாட்களுக்கு முன்னர் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது.

நேற்று காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 140-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருக்கிறது. அதே வேளையில், ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் நேற்று போர் நிறுத்தம் குறித்து , இஸ்ரேல் பிரதமரிடம் தெரிவித்திருக்கிறார். அப்போது இஸ்ரேல் பிரதமர், ``ஹமாஸ் அமைப்பு 200-க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறது. அவர்கள் அனைவரையும் விடுவித்த பின்னரே போர் நிறுத்தம் பற்றி பேச முடியும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE