2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் விரைந்தது

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: இஸ்ரேலின் பாதுகாப்புக்காக 2-வது அமெரிக்க போர்க்கப்பல் இஸ்ரேல் கடல் பகுதிக்கு விரைந்துள்ளது.

பாலஸ்தீனத்தின் வடக்கு காசா மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இந்த சூழலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீராங்கனை ஒருவர் உயிரிழந்தார். சில வீரர்கள் காயமடைந்தனர். வடக்கு எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் கூறும்போது, “வடக்கு காசாபகுதியில் பாலஸ்தீன மக்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்துதாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மிகப்பெரும் சவாலை சந்திக்க நேரிடும். நாங்கள் போரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படை சார்பில் யுஎஸ்எஸ் போர்டு போர்க்கப்பல் ஏற்கெனவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது. தற்போது ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஐசனோவர் போர்க்கப்பலும் இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது.

அமெரிக்கா சமரசம்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டு பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் நேற்று சவுதி அரேபிய இளவரசர் சல்மானை சந்தித்துப் பேசினார்.

ரியாத்தில் நடைபெற்ற சந்திப்பு குறித்து அந்தோணி பிளிங்கன் கூறும்போது, “சவுதி இளவரசருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அவர்களிடம் சிக்கியுள்ள பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.

இது ஹமாஸ் தீவிரவாதிகள்- இஸ்ரேல் ராணுவம் இடையிலான போர். இதில் பொதுமக்களின் பாதிப்புகளை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE