என்னைக் கொன்று விடாதீர்கள் - இஸ்ரேலியப் பெண் கதறல் - ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் பணயக் கைதிகளாகும் அப்பாவி மக்கள்

By செய்திப்பிரிவு

டெல் அவிவ்: இஸ்ரேல் பெண்ணை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி போரின் வேதனை சாட்சியாகி உள்ளது.

உலக வரலாற்றில் போர் பக்கங்களைத் திருப்பினால் அதில் பெண்களும், பெண் குழந்தைகளும் தான் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். வன்முறையும், பாலியல் வல்லுறவுகளும் அவர்களை பல மடங்கு பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்று கூறுகிறது ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் அமைப்பு. அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இஸ்ரேலில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் 25 வயது இஸ்ரேலியப் பெண்ணை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்திச் செல்கின்றனர். அந்தப் பெண் "என்னைக் கொன்றுவிடாதீர்கள்" எனக் கதறுகிறார். அவருடன் வந்த ஆண் நண்பரையும் பயங்கரவாதிகள் அடித்து இழுத்துச் செல்கின்றனர். ஆனால் அவரை அவசர அவசரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையில் உள்ள காசா பகுதிக்குள் கொண்டு சென்றுவிடுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி காண்போரைப் பதறவைக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நோவா அர்காமனி என்பதும் அவரின் நண்பர் பெயர் அவி நாதன் என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் சேர்ந்து இஸ்ரேல் தெற்கில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது திடீரென மூண்ட போரில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்றிருந்த இசை நிகழ்ச்சி அமைதிக்காக ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சி. ஆனால் இப்போது நோவா ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். காசாவுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட அவரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இந்தச் சூழலில் அவரது குடும்பத்தினர் நோவாவை மீட்டுத்தரக் கோரி சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். நோவா உங்கள் மகளாக, சகோதரியாக, தோழியாக இருக்கலாம் என்று உருக்கமாக பதிவுகளை பகிர்ந்துள்ளார் இஸ்ரேல் எழுத்தாளர் ஒருவர். அவரது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறாக இந்த இரண்டு நாட்களில் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பலரைப் பற்றி துயரக் கதைகள் இடம்பெற்றுள்ளன.

நாதனின் சகோதரர் மோஷேவும் சமூக வலைதளங்களில் தனது சகோதரர் பற்றி கவலை தெரிவித்துள்ளார். நாதன், நோவாவின் போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

நோவாவைப் பற்றி அவரது தோழி அமிர் மோவ்டி அளித்த ஊடகப் பேட்டியில், நோவா நேர்மறையான நபர். அவருக்கு பயணங்கள் பிடிக்கும். அண்மையில்தான் அவர் இலங்கை சென்று திரும்பினார். அவர் வீட்டில் ஒரே பிள்ளை. இப்போது அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். அவர்களால் பேசக்கூட இயலவில்லை என்றார்.

இஸ்ரேலின் தெற்கு, மத்தியப் பகுதிகளில் இருந்து நிறைய பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பணயக் கைதிகளாக இழுத்துச் சென்ற நிலையில் தங்கள் நாட்டு மக்களுக்கு சிறு இடையூறு நேர்ந்தாலும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE