நேபாளத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6.2 ஆக பதிவு; டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு

By செய்திப்பிரிவு

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் அதிர்வுகள் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 2.25 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆக பதிவாகி உள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் நண்பகல் 2.51 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் திபாயல் நகருக்கு வடகிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நில அதிர்வுக்கான தேசிய மையம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும், அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையமும் இந்த நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.9 ஆகவும், இரண்டாம் நிலநடுக்கம் 5.7 ஆகவும் அதில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் லேசாக ஆடத் தொடங்கி உள்ளன. இதனை அறிந்த மக்கள் உடனடியாக வெளியே வந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ, நொய்டா, ஹரியானாவின் சோனிபட் ஆகிய நகரங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE