நாஜி ஆதரவாளருக்கு கவுரவம்: புதிய சர்ச்சையில் கனடா பிரதமர்; மன்னிப்பு கோரிய சபாநாயகர்

By செய்திப்பிரிவு

ஒட்டாவா: நாஜிப் படைப் பிரிவின் முன்னாள் அதிகாரியை நாடாளுமன்றத்தில் கவுரவித்ததால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், நாடாளுன்ற கீழவை சபாநாயகர் யூத இன மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் போலிவர் கடும் கண்டனங்களை எழுப்பிய நிலையில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த வாரம் கனடா வந்திருந்தார். அப்போது அவருடன் வந்திருந்த உக்ரேனியரான நாஜிப் படைகளின் 14-வது வேஃபன் கிரண்டியர் பிரிவின் முன்னாள் அதிகாரி நாடாளுமன்றத்தின் கீழவையில் கவுரவித்தார். இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பியர் சமூக வலைதளம் வாயிலாக கடும் கண்டனங்களைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "உக்ரைன் அதிபரின் வருகையின்போது நாஜிப் படையின் முன்னாள் அதிகாரிக்கு நாடாளுமன்ற கீழவையில் கவுரவம் செய்யப்பட்டுள்ளது. இது பிரதமரின் மிகப் பெரிய தவறு. இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்கள் வருகை திட்டத்தை ஒருங்கிணைத்தல், கண்காணித்தல் பணி பிரதமர் அலுவலகத்தைச் சார்ந்தது. விருந்தினர்கள் யார் என்பதை அறிந்து முன் கூட்டிய அந்த அதிகாரியை தடுத்திருக்கலாம். மாறாக கவுரவம் செய்யப்பட்டுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சபாநாயகர் ஆண்டனி ரோட்டா கனடா மற்றும் உலகம் முழுவதும் வாழும் யூத சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகக் கூறினார். உக்ரைன் அதிபர் வருகையின்போது பார்வையாளர்கள் பிரிவில் இருந்த அந்த நபரை அங்கீகரிக்கும் முடிவு தனது தனிப்பட்ட முடிவு என்றும் அதற்காக வருந்துவதாகவும் அவர் கூறினார்.
ஏற்கெனவே, கனடா - இந்தியா மோதல் வலுத்துள்ள நிலையில் ட்ரூடோ தற்போது சர்வதேச அளவில் யூத சமூகத்தின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளார்.

கனடா - இந்தியா மோதல் பின்னணி: கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேறஉத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனட அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைகளின் நாயகன்! லிபரல் கட்சித் தலைவரான ஐஸ்டின் ட்ரூடோ 2015-ம் ஆண்டு முதல் கனடா நாட்டு பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான இப்சோஸ், கனடா மக்களிடையே கருத்து கணிப்பு நடத்தியது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 40 சதவீத மக்கள் கனடா எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலிவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 30 சதவீத மக்களே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். தற்போது பிரதமர் தேர்தல் நடத்தப்பட்டால், கன்சர்வேர்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொலிவர் 40 சதவீத வாக்குகள் பெறுவார் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

14 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்