ஜி-20 உச்சி மாநாடு | சர்வதேச ஊடகங்கள் புகழாரம்

By செய்திப்பிரிவு

ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாராட்டி செய்தி, கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

"பொதுவாக சர்வதேச மாநாடுகளில் அமெரிக்க அதிபரே ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைவிட இந்திய பிரதமர் மோடியே ஆதிக்கம் செலுத்தினார்.

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன. ரஷ்யாவை தனிமைப்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சி தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் ரஷ்யாவுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்து பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்தமுறை டெல்லி பிரகடனத்தில் ரஷ்யாவின் பெயர் இடம்பெறாமல் தடுத்து, அதேநேரம் போருக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

சர்வதேச வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் புதிய ரயில், கப்பல் போக்குவரத்து வழித்தட திட்டமும் மாநாட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது, சீனாவை ஓரம்கட்டியது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்திருக்கிறது" என்று சர்வதேச ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE