சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ‘சீம்ஸ்’ நாய் உயிரிழப்பு 

By செய்திப்பிரிவு

ஹாங்காங்: சமூக வலைதளங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற ‘சீம்ஸ்’ நாய் உயிரிழந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உலகம் முழுவதும் உள்ள நெட்டிசன்கள் பலரும் அந்த நாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களுக்கு சீம்ஸ் நாயை தெரியாமல் இருக்கமுடியாது. மீம்களில் அடிக்கடி இந்த நாயின் முகத்தை பார்க்கலாம். பகடியான பதிவுகளில் இந்த நாயின் படத்தை பலரும் பகிர்வது வழக்கம். கடந்த 2017-ஆம் ஆண்டு பால்ட்சே என்ற பெயர் கொண்ட ஷிபா இனு இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் உரிமையாளர் இந்த நாயின் புகைப்படங்களை பதிவேற்றுவதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கும் அளவுக்கு இந்த நாய் பிரபலமானது. இயற்கையாகவே சிரிப்பது போன்ற முக அமைப்பை கொண்ட இந்த நாயை நெட்டிசன்கள் ‘சீம்ஸ்’ என்று பெயர் வைத்து அழைத்தனர்.

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த சீம்ஸ் நாய், கடந்த 18ஆம் தேதி தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்விழிக்கவில்லை என்று அதன் உரிமையாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அப்பதிவில், “வருத்தப்பட வேண்டாம், பால்ட்ஸே இந்த உலகத்துக்கு அளித்து வந்த மகிழ்ச்சியை நினைவில் கொள்க. உங்களையும் என்னையும் இணைக்கும் வட்டமான சிரித்த முகத்துடன் இருந்த அந்த ஷிபா இனு, அவர் கரோனா காலகட்டத்தில் பலருக்கு மகிழ்ச்சியைத் கொடுத்தது, ஆனால் இப்போது அதன் பணி முடிந்தது” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE