''அஞ்சுவோடு காதல் இல்லை'' - பாகிஸ்தான் இளைஞர் விளக்கம்

By செய்திப்பிரிவு

பெஷாவர்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவைக் காண அந்நாடுக்கு சென்றுள்ள நிலையில், தங்களுக்குள் காதல் இல்லை என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் கைலோர் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதாகும் அஞ்சு. இவர், பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா என்ற 29 வயது இளைஞரோடு கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசித்து வந்த அஞ்சு, 30 நாட்கள் பாகிஸ்தானில் தங்குவதற்கான விசா பெற்று அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற கிராமத்தில் வசித்து வரும் நஸ்ருல்லாவை, அவரது இல்லத்துக்கே சென்று சந்தித்த அஞ்சு தற்போது நஸ்ருல்லாவின் வீட்டில் தங்கி இருக்கிறார். இந்தியாவில் இருந்து இளம்பெண் ஒருவர் வந்திருப்பது குறித்த தகவல் பரவியதால், பாகிஸ்தான் ஊடகங்கள் அது குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. இருவரும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த நஸ்ருல்லா, “அஞ்சு பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறார். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற திட்டம் எங்களுக்கு இல்லை. அஞ்சுவின் விசா காலம் முடிவடைந்ததும் ஆகஸ்ட் 20-ம் தேதி அவர் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புவார். எங்கள் வீட்டில் உள்ள தனி அறையில், எங்கள் வீட்டின் பெண்களுடன் அவர் தங்கி உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, தங்களுக்குள் இருப்பது நட்புதான் என்றும், காதல் அல்ல என்றும் அவர் கூறி இருக்கிறார். அஞ்சுவிடம் மாவட்ட காவல் அதிகாரி முஸ்டாக் நேற்று விசாரணை நடத்தியதாகவும், அவரது பயண ஆவணங்களை பரிசோதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

குல்ஷோவில் உள்ள பெரும்பாலான மக்கள் தீவிரமான மதப் பற்று உள்ள பஷ்டூன் சமூகத்தினர் என்றும், அஞ்சு பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டும்; இந்த விவகாரத்தால் தங்கள் நாட்டுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர்கள் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அஞ்சு பத்திரமாக இந்தியா திரும்புவார் என்று ராஜஸ்தானில் உள்ள அவரது கணவர் அர்விந்த் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE