166 ஆண்டுகளுக்கு முன்னரே காலநிலை மாற்றத்தை கணித்தவரான யூனிஸ் நியூட்டன் பிறந்த தினத்தை ( ஜூலை 17, 1819) கூகுள் டூடுள் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
உலகளவில் தொழிற் புரட்சி முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த யூனிஸ் நியூட்டன் என்ற பெண்மணி தனது ஆராய்ச்சிகள் மூலம் தொழிற் வளர்ச்சியின் காரணமாக வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு எவ்வாறு பூமி வெப்பமடைய காரணமாகிறது என்பதை கூற முயன்று கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட குறுகிய ஆய்வறிக்கை ஒன்று இன்றளவும் பிரபலமாக உள்ளது. அதில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி கால நிலை மாற்றத்துக்கு காரணமாகிறது என்று நிரூப்பித்து இருந்தார்.
அக்காலத்தில் பல்வேறு விஞ்ஞானிகள் பூமியின் வெப்ப நிலை அதிகரிப்புக்கு காரணம் என்ன என்பதை உறுதியாக கூறாமல் பல்வேறு கருத்துகளை முன்மொழிந்தனர். ஆனால் மிகத் துல்லியமாக தனது ஆராய்ச்சிகள் மூலம் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதற்கு கார்பன் டை ஆக்சைடுதான் காரணம் என்று யூனிஸ் நியூட்டன் விளக்கினார்.
யூனிஸ் நியூட்டனின் சோதனை என்ன.? பூமியின் வெப்ப உயர்வை கண்டறிய யூனிஸ் தொடர்ச்சியான சோதனைகளை நடத்தினார். ஈரமான காற்று, வறண்ட காற்று, CO2 ஆகியவற்றை வெவ்வேறு சோதனைக் குழாய்களில் நிரப்பினார். பின்னர் சூரிய ஒளியின் முன் அவற்றை வைத்து ஒவ்வொரு குழாயிலும் பாதரச வெப்பமானியைப் பொருத்தினார். இந்த ஆய்வின் முடிவில் வறண்ட காற்றை விட ஈரமான காற்றில் சூரியனின் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதையும், கார்பன் டை ஆக்சைடு கொண்ட குழாயில் அது அதிகமாக இருப்பதையும் அவர் உணர்ந்தார். இதில் கார்பன் டை ஆக்சைடு எடுத்து செல்லும் ரிசீவர் கணிசமாக வெப்பமடைந்தது, மற்ற குழாய்களைவிட கார்பன் டை ஆக்சைடு இருந்த குழாய் குளிர்விக்க பல மடங்கு நேரம் எடுத்து கொண்டது ஆகியவற்றை அவர் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.