ஒரே வாரத்தில் மூன்றாவது முறை | புதிய உச்சத்தை தொட்ட உலகின் சராசரி வெப்பநிலை

By செய்திப்பிரிவு

ஒரானோ: உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவானது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிக தகிக்கும் வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், அதை விஞ்சும் வகையில் கடந்த ஜூலை 3-ஆம் நாள் 17.01 டிகிரி செல்சியஸ் (62.62 டிகிரி பாரன்ஹீட்) சராசரி வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் (62.9 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. தொடர்ந்து ஜூலை 6 ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் (62.9 டிகிரி பாரன்ஹீட்) என்று பதிவானதாக அமெரிக்காவின் மெய்ன்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஜூலை 3 புதிய உச்சம் பற்றி லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில், "இந்த வெப்பநிலையானது ஏதோ ஒரு மைல்கல் என நினைக்க வேண்டாம். இது நாம் கொண்டாடும் எண் அல்ல. உண்மையில் இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி" என்று தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE