இந்திய தூதர்களுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல்: கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இங்கிலாந்து மற்றும் கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயலில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த மாதம் 18-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கனடாவில் வரும் 18-ம் தேதி பேரணி நடத்தப்போவதாகவும், காலிஸ்தான் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கனடா அரசிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்தது. இதையடுத்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி நேற்று ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் பேசிவருகிறோம். இந்திய தூதர்களை பாதுகாப்பது கனடாவின் கடமை. கனடாவில் உள்ள சிலரின் நடவடிக்கை, ஒட்டுமொத்த சமுதாயத்தின் குரல் அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம்’’ என கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறும்போது, ‘‘காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவிரவாத கொள்கையை கொண்டிருப்பதால், அவர்களின் செயல்களுக்கு இடம் அளிப்பது நல்லதல்ல என கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் இந்தியா தெரிவித்துள்ளது’’ என்றார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள கனடா தூதருக்கு நேற்று சம்மன் அனுப்பிய மத்திய அரசு, கனடாவில் இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விஷயம் குறித்து பேசி, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது கண்டனத்தை பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அரசுக்கு தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE