இத்தாலி அரசியலில் கிங் மேக்கராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனி மறைவு

By செய்திப்பிரிவு

ரோம்: இத்தாலியின் அரசியல் அமைப்பை மாற்றிய முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86.

சில்வியோ பெர்லுஸ்கோனி கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். குறிப்பாக, கரோனாவுக்கு பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. கூடுதலாக புற்றுநோய் தாக்குதல் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் முதல் அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

சில்வியோ பெர்லுஸ்கோனியின் மறைவு, இத்தாலியில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சில்வியோ பெர்லுஸ்கோனி வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆலன் கூறும்போது, “மறைந்த பிரதமர் போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில் மிக முக்கிய நபர். அவரைச் சுற்றி சர்ச்சைகள் பல இருந்தன. அவர் சர்ச்சைக்குரிய நபராக இருந்தார். ஆனால, அவர் தனது ஆதரவாளர்களால் பெரிதும் விரும்பட்டார்” என்றார்.

இத்தாலி பிரதமராக சில்வியோ இருந்தபோது இங்கு அகதிகளுக்கு இடமில்லை. ஆனால், அழகிய பெண்கள் வரலாம் என கூறியது போன்ற எராளமான சர்ச்சை பேச்சுகளை அவர் பேசியிருந்தார்.

இத்தாலி அரசியலில் கிங் மேக்கராக சில்வியோ பெர்லுஸ்கோனி கருதப்பட்டார். அவரது கட்சி சரியான கூட்டணியுடன், பிரதமர் மெலோனியின் தலைமையில் இன்னும் ஆட்சியில் உள்ளது. அவர் இத்தாலிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர். ஒவ்வொரு நாளும் இத்தாலியர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் தான் தொடங்கிய மீடியாக்கள் மூலம் இத்தாலியின் தொலைக்காட்சி அமைப்பை மாற்றினார். சரியோ, தவறோ அவர் இத்தாலிய ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று அரசியல் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE