அமெரிக்கா சென்றபோது அவசரமாக தரையிறங்கியதால் ரஷ்யாவில் இந்திய விமானப் பயணிகள் அவதி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியிருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

டெல்லியிலிருந்து, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியாவின் போயிங் 777 ரகவிமானம் 216 பயணிகள் மற்றும்16 ஊழியர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது. ரஷ்ய வான்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் மகடான் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அருகில் உள்ள ஓட்டல்கள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களை அமெரிக்கா கொண்டு செல்ல, மாற்று விமானத்தை ஏர் இந்தியா அனுப்பியுள்ளது.

இதுகுறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த ககன் கூறியதாவது:

அமெரிக்கா சென்ற விமானத்தில் 230-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தோம். எங்களது உடைமைகள் விமானத்திலேயே உள்ளன. நாங்கள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு பல இடங்களில் தங்க வைக்கப்பட்டோம். பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டவர்களில் தரையில் படுக்கையை விரித்து தூங்கினர். ஒரு அறையில் 20 பேர் தங்கவைக்கப்பட்டனர். கழிவறை வசதிகள் சரியாக இல்லை. மொழி பிரச்சினையால் ரஷ்ய அதிகாரிகளுடன் பேச முடியவில்லை. ஆனால், அவர்கள் கனிவுடன் நடந்து கொண்டனர். எங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அசைவம் மற்றும் கடல் உணவுகள் வழங்கப்பட்டன. கோக் மற்றும் ரொட்டிகள் வழங்கப்பட்டன. அதனால் சிலர் ரொட்டி மற்றும் சூப் மட்டும் எடுத்துக்கொண்டனர்.முதியவர்களுக்கு தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை. எங்களுடன் பயணம் செய்த பெண் 2 குழந்தைகளுடன் வந்திருந்தார். அவர் பல சிரமங்களை சந்தித்தார்.

இவ்வாறு ககன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE