மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ஜாக்குவஸ் லூசியன் மோனாட். இவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1910 பிப்ரவரி 9-ம் தேதி பிறந்தார். ஓவியரான தந்தை, மகனிடம் அறிவியலும் சமூகமும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார். இதனால் ஜாக்குவஸூக்கு சிறு வயதிலேயே உயிரியலில் அதிக ஆர்வம் உண்டானது. இயற்கை விஞ்ஞானத்தில் 1931-ல் பட்டம் பெற்றார். அடுத்த சில ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி, டிஎன்ஏ, ஆர்என்ஏ மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் அறிவியல் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார்.1941-ல் இயற்கை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பாஸ்டர் கல்வி நிறுவனத்தின் செல் உயிரி வேதியியல் துறை தலைவராக 1954-ல் பொறுப்பேற்றார்.
ஜீன்கள், நொதிகளை உருவாக்குவதன் மூலம் செல்களின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்பை இவரோடு இணைந்து பிரான்கோயிஸ் ஜேக்கப், ஆண்ட்ரே லூஃப் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் வழங்கினர். இசையும் படகு சவாரியும் இவரது விருப்பமான பொழுதுபோக்குகள்.
இசையோடு இலக்கியத்திலும் நாட்டம் கொண்டவர். உயிரியல் துறை ஆராய்ச்சிகளுக்காக பல பரிசுகள், விருதுகளை பெற்றவர். 1965-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.