ஜன.24: இன்று என்ன? - சம உரிமை பெற்றுத் தந்த முத்தம்மா

By செய்திப்பிரிவு

இந்தியக் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண், நாட்டின் முதல் பெண் வெளியுறவு அதிகாரி சி.பி.முத்தம்மா. கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் 1924 ஜனவரி 24-ல் பிறந்தார்.

ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து குடிமைப்பணியில் தேர்ச்சி பெற்று வெளியுறவுத் துறை அதிகாரியானார். அன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் அதிகாரிகளுக்கு தனித்தனி விதிமுறைகள் இருந்தன. பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் பெண்கள் உரிமை கோர முடியாத நிலை நீடித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.

வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது, முத்தம்மா பதவி உயர்வுக்கு தகுதியானவர் என்று தீர்ப்பு வழங்கினார். பின்னாளில் நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார் முத்தம்மா. பர்மா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவில் தூதரக உயர் பொறுப்புகளில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண்ணும் இவரே.

ஆதரவற்றோர் இல்லம் கட்ட டெல்லியில் இருந்த தனக்கு சொந்தமான நிலத்தில் 15 ஏக்கரை அன்னை தெரசாவுக்கு வழங்கியதன் மூலம் தன்னலமற்ற சமூக அக்கறையையும் வெளிப்படுத்தியவர் முத்தம்மா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE