இன்று என்ன? - கட்சி பணம் என்னுடையது அல்ல என்றவர்

By செய்திப்பிரிவு

பொதுவுடைமை இயக்க தலைவர் ப.ஜீவானந்தம். இவர் 1907-ம் ஆண்டு நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பூதப்பாண்டியில் பிறந்தார். இந்திய விடுதலை போராட்டமான காந்தியின் ஒத்துழையாமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, சத்யாகிரகம் உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்டார்.

சேரன்மாதேவி குருகுலத்தில் பணியாற்றினார். அப்போது உயர்சாதி மாணவர்களுக்கு தனியாகவும் பிற மாணவர்களுக்கு தனியாகவும் உணவு சமைத்தது பிடிக்காமல் வெளியேறினார். பின்னர் சிவகங்கை மாவட்டம் சிராவயலில் காந்தியடிகள் பெயரில் ஆசிரமம் தொடங்கினார்.

மதுரையில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் 2 நாட்கள் உண்ணாத காரணத்தால் ஜீவா மயங்கி விழுந்தார். மயக்கம் தெளிந்தவுடன் மாநாட்டிற்கு பந்தல் போட்டவரை அழைத்து சட்டைப்பையில் இருந்து பணத்தை கொடுத்தார். எல்லோரும் உங்களிடம் தான் பணம் இருக்கிறதே ஏன் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்தீர்கள் என்று கேட்டனர். இது கட்சி பணம் என்னுடையது அல்ல என்றார்.

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வண்ணாரபேட்டை தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற இவர் 1963 ஜனவரி 18-ம் தேதி காலமானார். 2010-ம் ஆண்டு இந்திய அரசு தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE