பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா 1892 ஜனவரி 4-ம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். 1913-ல் இங்கிலாந்து சென்று சார்ட்டர்ட் அக்கவுன்ட்ஸ் மற்றும் பொருளாதாரம் பயின்றார்.
1928-ல் அமெரிக்கா சென்று பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை எப்படி சுரண்டுகிறார்கள் என்ற ஆராய்ச்சிக் கட்டுரைக்கு காந்தியிடம் முகவுரை பெறுவதற்காக அனுப்பினார். பின்னர், ‘யங் இந்தியா’ பத்திரிகையின் ஆசிரியராக காந்தி இவரை நியமித்தார். ‘குமரப்பாவுக்கு நன்கு பயிற்சி அளித்துவிட்டீர்களே’ என்று மதன்மோகன் மாளவியா கூறியபோது, ‘நான் பயிற்சி அளிக்கவில்லை. அவர் எனக்கு ரெடிமேடாக கிடைத்தார்’ என்றார் காந்தி.
இவரது கட்டுரைகள் ‘யங் இந்தியா’வில் வெளிவந்தபோது அச்சகத்தை ஆங்கிலேய அரசு பறிமுதல் செய்தது. அதையும் மீறி, தட்டச்சு செய்து நகல் எடுத்து வெளியிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெர்மானியப் பொருளியலாளர் ஷமாக்கர் தனது நூலில் ‘இந்திய தத்துவ மேதை’ என்று குமரப்பாவை பெருமையாக கூறியுள்ளார். சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் வளம் கொடுக்கும் பொருளியல் மாதிரியை வடிவமைத்தார் குமரப்பா.