‘தி இந்து’ மூலம் வெளிவந்த முதல் புத்தகம்

By செய்திப்பிரிவு

ஓயாமல் அரசியல் பணியாற்றிய போதும் படிப்பின் அவசியத்தையும் எழுத்தின் அவசியத்தையும், நேரு அறிந்திருந்ததால் வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த புத்தகங்களை நமக்கு வழங்கினார்.

# மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியின் பத்தாவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக ரஷ்யாவுக்கு 1927-ல்
சுற்றுப் பயணம் சென்று வந்த நேரு, தமது பயண அனுபவங்களை ஆங்கில் ‘தி இந்து’ நாளிதழில் தொடராக எழுதினார். பின்னர் அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு. 1928 - ல் டிசம்பரில் நேருவின் முதல் நூலான “சோவியத் ரஷ்யா” என்ற பெயரில் வெளிவந்தது.

# காங்கிரஸ் கட்சியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது, “இந்தியா எங்கே போகிறது?” என்ற ஒரு சிறு நூலை எழுதி இந்திய சமூகம் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

# இதுமட்டுமின்றி இலக்கியவுலகில், ‘உலக வரலாற்றுக் காட்சிகள்’ (Glimpses of World History), ‘சுயசரிதை’ (Autobiography), ‘இந்திய தரிசனம்’ (Discovery of India) ஆகிய முக்கியமான மூன்று புத்தகங்களை நேரு எழுதியுள்ளார்.

1. உலக வரலாற்றுக் காட்சிகள்: இந்த புத்தகம் வெளியாவதற்கு முக்கிய காரணம் தம் மகள் இந்திராவுக்கு உலகியல் அறிவை உணர்த்துவதற்காக 1928 முதல் 1931வரை சிறையில் இருக்கும்போது 196 கடிதங்கள் எழுதினார். உலகம் உருவான விதம், உலக உயிர்களின் தோற்றம், மொழியின் தோற்றம், மனிதனின் இனப்பிரிவுகள், நாகரிகம் வளர்ந்த முறை, இந்திய இதிகாசங்கள், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, டால்ஸ்டாய், காளிதாசர், மகாத்மா காந்தி போன்ற பல உலக மேதைகளை பற்றி அந்த கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு இந்த கடிதங்களை தொகுத்து ‘உலக வரலாற்றுக் காட்சிகள்’ என்ற தலைப்பில் நூலாக உருவாக்கி 1934-ல் இந்திராவின் 16-வது பிறந்த நாளில் அவருக்கு அன்புப் பரிசாக அளித்தார். இந்திராவுக்கு வழங்கிய அந்த புத்தக பரிசு உலகிற்கு கிடைத்த இலக்கிய பரிசு.

2. தன் வரலாறு (Auto Biography): ஆங்கில உரைநடை இலக்கியத்துக்கு நேரு வழங்கிய மற்று மோர் அற்புதமான காணிக்கை அவர்தம் “தன் வரலாறு” ஆகும். 1934-ல் ஜூன் மாதத்தில் டேராடூன் சிறையில் இருந்த போது எழுதினார்.

3. இந்திய தரிசனம் (Discovery of India): 1942-ல் ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது நேரு கைது செய்யப்பட்டார். நேரு 9-வது முறையும், இறுதி முறையும், நீண்ட காலச் சிறைவாழ்வும் ஆகும். 1040 நாட்கள் அவர் சிறையில் இருந்தார். 1944 ஏப்ரல் 13-ம் நாள் இந்திய தரிசனம் என்ற நூலை எழுதத் தொடங்கினார். இந்தியா ஆரம்ப நாளிலிருந்து இன்று வரை பெற்றிருக்கும் பரிணாம வளர்ச்சியை விளக்கும் முழுமையான நூல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE