பள்ளிக்குள் பல விருதுகள்

By சக.முத்துக்கண்ணன்

ஒரு பள்ளியில் சுதந்திர தினம் மிட்டாய் வடிவத்தில் சுருங்கிப் போயிருப்பதையும் இன்னொரு பள்ளியில் கலைநிகழ்ச்சிகள், பரிசுகள், கைதட்டல்கள் என அலங்காரமும் கொண்டாட்டமுமாக நிகழ்த்துவதையும் பார்க்கிறோம். அரசு பள்ளி, தனியார் பள்ளி என்றில்லை. அரசுப் பள்ளிகளுக்குள்ளேயே இவ்விரண்டு விதங்களைக் காணமுடிகிறது.

சுதந்திர தினவிழா மட்டுமல்ல. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தலைமையாசிரியரின் ஆர்வத்தையும், ஆசிரியர்களின் ஈடுபாட்டையும்பொருத்தே அவை குழந்தைகளுக்கானதாக மாறுகின்றன.

கலைநிகழ்ச்சிகளோடு கோலாகலமானதாக சுதந்திர தின விழாவை நடத்தும் அரசுப் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு. இந்நாள் நிகழ்வுக்கென இரண்டு மூன்று வாரங்கள் மெனக்கெடும் பள்ளிகளில் குழந்தைகள் சந்தோசமாக இருக்கின்றனர். பள்ளிக்கூட நினைவுகளில் படித்த பாடங்களை விட இது மாதிரியான நிகழ்ச்சியில் பங்கேற்ற, பரிசுபெற்ற அனுபவங்களே ஞாபகத்தில் படிகின்றன.

பலர் முன்னிலையில் மேடையேற்றம் என்பதற்கான தொடக்ககால வாய்ப்பை இதுபோன்ற நாட்களில்தான் ஏற்படுத்தித் தர முடியும். அந்நாளில் ஆசிரிய, மாணவ வருகையைக்கூட உறுதிப்படுத்தாத பள்ளிகள் உண்டு. எதுவும் கட்டாயமாக்கி அரசாணையாக உருவாகாதவரை மாற்றங்களில் முழுமை சாத்தியமில்லை.

கொடியேற்ற நாளில் பாடுபட்ட முன்னோர்களைப் பற்றிய பேச்சும் நினைவுகூரலும் கூட வரலாறு அறியாத தாம்தூம் பேச்சுக்களாகவே ஒப்பிக்கப்படுகின்றன. உள்ளூர் பிரமுகர்கள் எனும் பேரில் அரசியல் முகங்களின் ஒழுங்கமைக்கப்படாத அரசியல் பேச்சுகளும், சிறப்புரைகள் என்கிற கொடுமைகளும் இந்நாளின் ‘எப்படாமுடியும்?' மனநிலைகள். எல்லாவற்றிலும் சம வாய்ப்போடு குழந்தைகளின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் பள்ளிகள் வாய்க்கப் பெறுதல் அந்நாள் வரம்.

திருச்சி மாவட்டம் சடையம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் ஒருபுதுமையைப் பார்த்தேன். தலைமையாசிரியர் மோசஸ் ராஜ் இவ்வகையில் முன் உதாரணமாகிறார். இந்தச் சுதந்திர தின விழாவினை பேச்சு, பாடல், கவிதை, மாறுவேடம், நடனம்,புத்தகப் பரிசுகள், தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்துதல் மாவட்டஅளவில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு கேடயம், துணைசெய்த ஆசிரியர்களுக்கு கேடயம் என பள்ளி மேலாண்மைக்குழுவின் ஒத்துழைப்போடு பாராட்டும் கொண்டாட்டமுமாக நிகழ்வை நடத்தியிருந்தார். மேலும் சில புதிய விருதுகளையும் அறிமுகப்படுத்தினார்.

விருதுகள் அறிமுகம்: சிறந்த வகுப்புத் தலைவன் விருது, மலர்ந்ததில் சிறந்தது (attendance) விருது, தூய்மை வகுப்பு விருது, தேர்வில் முதல்வன் விருது, சிறந்த வழிபாட்டுக் கூட்டத்திற்கான விருது,

அதிக தேர்ச்சி வகுப்பு விருது, அதிக சராசரி விருது என 7 விருதுகளை அறிமுகம் செய்தார். இவை அனைத்தும் சுழற்கோப்பை வடிவில் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இக்கோப்பைகள் சுழற்சியில் இருக்கும். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தைத் தந்திருந்தது. ஒருவித கூட்டு உழைப்பிற்கு தயாராகிறார்கள். புதுமையும், மாணவ மையமுயற்சிகளும் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவை.

விசேஷ வீடு: பள்ளிக்கூடமும் நம் வீடு போலத்தான். அவ்வப்போது அலங்கரித்துக் கொண்டாட வேண்டும். சந்தோசமாய் ஆடிக்களிக்க சுதந்திர தினம் போல சில நாட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு விஷேசவீடு போல பள்ளியை வைத்திருக் கும் மனிதர்கள் குழந்தைகளின் சகிருதயர்கள்.

பள்ளிப் பாடங்கள் என்பவை அடிப்படையில் சந்தோசத்தை தந்திருக்க வேண்டியவை. வாழ்வே அந்தந்த நிமிடங்களின் சந்தோசத்தால் ஆனதுதானே. ஒரு நல்ல தலைமை வாய்த்து விட்டால் சந்தோசம்தான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE