இன்று என்ன? - 8 மணிநேர வேலைக்கு போராடியவர்

By செய்திப்பிரிவு

தென்னிந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை தொடங்கியவர் வ.சுப்பையா. இவர் 1911-ம் ஆண்டு பிரெஞ்ச் இந்தியப் பகுதியான பாண்டிச்சேரி வெள்ளாழர் வீதியில் பிறந்தார். ஆரம்பக்கால அரசியல் வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார். 1933-ம் ஆண்டு அரிஜனசேவா சங்கம் தொடங்கினார்.

1936-ல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய போராட்டத்திற்கு வ.சுப்பையா தலைமை தாங்கினார். அவர்களை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்தியம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை புதுச்சேரியின் பக்கம் திருப்பியது.

எட்டு மணி நேர வேலை மற்றும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை கோரி நடத்தப்பட்ட இப்போராட்டத்தின் விளைவாக 1937 ஏப்ரல் 6-ல் பிரஞ்சு - இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்பட்டது.

இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 8 மணிநேர மட்டுமே வேலை செய்யவும், தொழிற்சங்கம் அமைத்து உழைப்பாளர்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் சுப்பையா வழிவகுத்தார். 1993 அக்டோபர் 12-ல் காலமான சுப்பையா நினைவாக 2011-ல் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுக் கவுரவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE