வட்ட அளவிலான விளையாட்டு போட்டி: தென்கரும்பலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி

By செய்திப்பிரிவு

தண்டராம்பட்டில் நடைபெற்ற வட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் தென்கரும்பலூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தண்டராம்பட்டு வட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி தண்டராம்பட்டு லூர்து மாதா பள்ளியில் நடைபெற்றது. 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் வாலிபால், எறிபந்து, கூடைபந்து மற்றும் பால் பேட்மின்டன் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், தண்டராம்பட்டு வட்டத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இப்போட்டியில், தென்கரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 14 வயதுக்கு உட்பட்ட பால் பேட்மின்டன் போட்டியில் முதலிடத்தையும், 14 வயதுக்கு உட்பட்ட டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம், தென்கரும்பலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் செப்டம்பர் மாதம் நடை பெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முத்துகிருஷ்ணனை பள்ளியின் தலைமை ஆசிரியை பேபி கிளாரா மற்றும் ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஏழுமலை, சாந்தி, கலைச்செல்வி, முகமது சுனித் ஆகியோர் பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE