பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்

By செய்திப்பிரிவு

சென்னை நகரின் பொது இடங்களும் பொது போக்குவரத்தும் பெண்களுக்கு பூரண பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவெடுத்திருக்கிறது.

நாட்டிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை உள்ளது. பணிக்குச் செல்லும் பெண்கள் சுதந்திரமாகவும் சமமாகவும் மாண்புடனும் நடத்தும் சூழல் சென்னை பெருநகரில் உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இதற்கு நேர்மாறாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நிகழக்கூடிய மாநிலமாக உத்தரப்பிரதேசமும், நகரமாக புது டெல்லியும் இருப்பது கவலைக்குரியது.

இந்நிலையில், அடுத்த நான்கு மாதங்களுக்கு மகளிர் பாதுகாப்பு குறித்த ஆய்வை சென்னையில் மேற்கொண்டு அதன் அடிப்படையில் புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 500 பேருந்து நிறுத்தங்களில், 10 வழித்தடங்களில், உள்ளூர் ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்தப்படும். பேருந்து நிறுத்தம், ரயில் நிலையத்தை சுற்றியுள்ள இடங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் தெருவிளக்கு வசதி, நடைபாதை, பொதுக் கழிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகள் உள்ளிட்டவை கண்காணிக்கப்படும்.

ஆட்டோ, ஷேர் ஆட்டோ பயணங்களில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதும் உற்று கவனிக்கப்படும். பொது இடங்களில் மகளிர் உதவி எண்களில் பதிவாகும் புகார்களும் அதையொட்டி எடுக்கப்படும் நடவடிக்கைகளும் பதிவு செய்யப்படும். இந்த ஆய்வின் அடிப்படையில் மகளிர் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

இந்த ஆய்வு சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு அதனையொட்டி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நிச்சயம் தலைநகரம் மேலும் தலைநிமிரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE