பேர் சொல்லும் பிள்ளை

By செய்திப்பிரிவு

சாலை வசதி செய்து தர கோரிக்கை விடுத்து, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்புக்கு அவரது பெயரையே சூடிய 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தன் கைப்பட கடிதம் எழுதியிருக்கிறார்.

சென்னை அருகில் கூடுவாஞ்சேரியில் வசித்து வருகிறார் மாணவர் அ.இறையன்பு. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரும் ஐஏஎஸ் அதிகாரியுமான வெ.இறையன்பு இளையோரை வழிநடத்தும் தன்னம்பிக்கை பேச்சுக்காகவும், எழுத்துக்காகவும் புகழ் பெற்றவர். அவர் மீது கொண்ட பற்றுதல் காரணமாக தங்களது மகனுக்கு அவரது பெயரையே மாணவன் அ.இறையன்புவின் பெற்றோர் சூட்டியுள்ளனர்.

இதனை குறிப்பிட்டு அதிகாரி இறையன்புக்கு மாணவன் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். மேலும் அந்த கடிதத்தில், தான் வசிக்கும் பகுதியில் தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளதால் மழைக்காலத்தில் மேலும் சேத மடைந்துவிடுகின்றன. நடப்பதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. வழிப்போக்கர்கள் பலர் வழுக்கிவிழுந்து விபத்துக் குள்ளாகிறார்கள்.

ஆகையால் தங்கள் பகுதிக்கு சீரான சாலை வசதி செய்து தரும்படி வேண்டுகோள் வைத்துள்ளார். கடிதத்துடன் மாணவர் தனது ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளார்.

மாணவன் அ.இறையன்புவின் சிந்தனையும் செயலும் நிச்சயம் வரவேற்கத்தக்கத்து. சமூக அக்கறையுடன் தனது குரலை உரக்கச் சொல்லக் குழந்தைக்கு கற்றுத் தந்த அவரது பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள்.

இதேபோன்று மாணவர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பகுதியின் சுற்றுச்சூழல் குறித்த பொறுப்பையும் அதனை முறையாக வெளிப்படுத்தும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய மாணவர்களே நாளைய இந்தியா என்பதால் உங்கள் குரல் ஆட்சியாளர்களையும் அசைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE