அனுபவ அறிவே ஆனந்தம்

By செய்திப்பிரிவு

அன்றைய நாள் ஏழாம் வகுப்பில் கீரைப் பாத்தியும் குதிரையும் என்ற பாடத்தை மாணவர்களோடு கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது கீரை பயிரிடும் முறை, கீரைப் பாத்தியின் அமைப்பு, மிளகாய்ப் பாத்தி, நெல் நாற்றங்கால் பாத்தி தயாரித்தல் என்று மாணவர்களின் சிந்தனைக்கு சிறகசைத்துக் கொண்டே இருந்தேன்.

உங்களில் எத்தனை பேர் நெல் வயலை நேரடியாகச் சென்று பார்த்துள்ளீர்கள் என்று கேட்டபோது பாதி மாணவர்கள் பார்த்ததில்லை என்று பதில் அளித்தனர். சற்றே மனக் காயத்தோடு அன்றைய வகுப்பில் இருந்து வெளியேறினேன். அந்தக் காயத்திற்கு மருந்தாக அடுத்த நாளே, எங்கள் துணை முதல்வரிடம் இருந்து ஒரு இன்ப அறிவிப்பு வந்தது. நம் பள்ளிக்கு அருகில் இருக்கும் நெல் வயலில் இன்று நடவு நடுகிறார்கள். அதனைப் பார்ப்பதற்குமாணவர்களை அழைத்துச் செல்லலாம் என்று...

இந்த மகிழ்ச்சியான தகவலை மாணவர்களிடத்தில் கூறியவுடன் மிகவும் துள்ளலுடன் தயாராயினர். நாம்வயலைப் பார்க்கப் போகிறோமா! ஜாலி... ஜாலி... என்று ஆரவாரமிட்டனர். மாணவர்களை வரிசையாக நிற்க வைத்து நெல் வயல் பற்றிய சில குறிப்புகளைக் கூறி அழைத்துச் சென்றேன்.

முதன்முறையாக நாற்றுகளையும் வயலையும் அருகிலிருந்து பார்க்கும் மாணவர்கள் வியப்பு மேலிடப் பார்த்தனர். நாற்றுகள் சிறுசிறு கட்டுகளாக சேற்று வயலில் கிடந்தன. இதுவரை நெல் நாற்றுகளைப் பார்த்திராத ஒரு மாணவன் அவற்றைப் பார்த்துப் புற்களை ஏன் கட்டுக் கட்டி சேற்று வயலில் போட்டு உள்ளார்கள் என்று கேட்டான்.

" தம்பி அது புல் அல்ல நாற்று முடிச்சுகள் இதனைத் தான் வயலில் நடவு செய்வார்கள்" என்ற விபரத்தைக் கூறினேன். வெட்கம் கலந்த புன்னகையுடன் பார்த்தான். சிறிதுநேரத்தில் அந்த வயலில் தாய்மார்கள் நடவு நட ஆரம்பித்தார்கள். மாணவர்களின் காதுகள் அன்று தான் முதன் முதலாய் வயலில் நடவுநடுபவர்கள் பாடும் பாடலைக் கேட்டன.

ஒரு கயிற்றை இரு கம்புகளுக்கு இடையே கட்டி கம்புகளை வயலில் ஊன்றினார்கள். ஒரே நேர்கோடாக வைத்துக் கொண்டார்கள். அதை அளவீடாக வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகஇடைவெளி விட்டு நாற்றுகளை நட்டார்கள்.

வரப்பிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் நாற்றுகளைத் தொட்டுப் பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது என்றார்கள். நடவு நடும் அம்மா அதனை மாணவர்கள் கையில் கொடுத்தார். மாணவர்கள் மென்மையாகத் தொட்டுத் தடவிப் பார்த்தனர்.

கற்றல் என்பது புத்தகம் சார்ந்தது மட்டும் அல்ல. சூழ்நிலைகளால் வடிவமைக்கப்படக்கூடியது. தன்னைச் சுற்றிநடக்கும் செயல்களை உற்று நோக்கிஉள்வாங்கக் கூடியது. காட்சிகளின் மூலம் மாணவர்களின் எண்ணங்கள் தூண்டப்படும். இம்முறையில் கல்வியறிவு மேம்படுகிறது.

கல்வி என்பது பாடப்புத்தகத்தோடு நின்று விடாமல் புத்தகத்தில் படிப்பதை நேரடியாகக் களத்திற்கே சென்று கற்றதில் ஆனந்தமும் மன நிறைவும் கொண்டனர் மாணவர்கள் .

ஒவ்வொரு மாணவனுக்கும் இயற்கையாகவே கற்றுக் கொள்ளும் திறன் உள்ளது. அதனை, நெறிப்படுத்துவதே ஆசிரியரின் மேலான பணி. மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டுணர்ந்து நன்முறையில் வழிநடத்தி மாணவர்களை உருவாக்குவோம்.

- கட்டுரையாளர் ஆசிரியர் எஸ்.ஆர்.வி.சீனியர்செகண்ட்ரி பப்ளிக் பள்ளி சமயபுரம். திருச்சி மாவட்டம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE