கோவை: வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த கோவை 30 இடங்களில் நூலகம் அமைக்கும் பணியை காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து, பொறுப்பாளர்களிடம் பதிவேடுகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளம் குற்றவாளிகள் உருவாவதை தடுப்பதற்காகவும், குழந்தைகளை மாலை நேரங்களில் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்துவதற்காகவும் வீதிதோறும் நூலகம்என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதிகள், குடிசைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஒவ்வொரு தெருவிலும், ஒரு நூலகம் அமைக்கப்படும். அந்தவகையில், 30 இடங்களில் நூல்கள் வைப்பதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தலா 200 புத்தகங்கள் வைக்கப்படும்.
குழந்தைகளின் கற்பனைத் திறனை தூண்டக்கூடிய வகையில், படங்களுடன் கூடிய கதைகள், நீதி நெறிக் கதை புத்தகங்கள் உள்ளிட்டவை இங்கு வைக்கப்பட்டு இருக்கும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த புத்தகங்கள் நூலகங்களுக்கு இடையே பரிமாற்றம் செய்து புதுப்பிக்கப்படும். குழந்தைகள் புத்தகங்களை அங்கு வைத்தும் படிக்கலாம், வீட்டுக்கு எடுத்துச் சென்றும்படிக்கலாம். குழந்தைகளாகஇருக்கும்போது வாசிப்பு பழக்கத்தை கொண்டு வந்துவிட்டால், அவர்களுக்கு புத்தகங்கள் மூலம் நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும். ஜிஆர்ஜி கல்வி நிறுவனத்தினர் தங்களது சிஎஸ்ஆர் நிதியின் மூலம் இதற்கான கட்டமைப்பை வழங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.