3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பரில் திறனறித் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு NAS எனப்படும் தேசிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கரோனா தொற்றால் மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் குறைபாட்டைக் கண்டறியும் இந்தத் தேர்வு நவம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஏற்பட்ட கரோனா 2-வது அலையால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்களுக்குச் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுப் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பைக் கணக்கிட்டு, அதைக் குறைக்கும் வகையில் திறனறித் தேர்வை (National Achievement Survey -NAS 2021) நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தத் தேர்வு நவம்பர் 12-ம் தேதி நடைபெறுகிறது. கற்றல் குறைபாட்டைப் போக்குவதற்காகத் தேர்வை நடத்தி, மாணவர்களின் திறனை மதிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்குக் கற்றல் சார்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE