கல்லூரிக் கல்வி 2021-22ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் 25% கூடுதலாக மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசின் முதன்மைச் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’2020-21ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும் மாணவ / மாணவிகளைச் சேர்ப்பதற்கு அனுமதி அளித்தும் கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு, சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிடப்பட்டன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் 17.08.2021 அன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குக் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு 25 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகாமையிலுள்ள / சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களில் இருந்தும் நகராட்சியில் இருந்தும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவ / மாணவிகள் அரசுக் கல்லூரிகளில் அதிகளவில் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனர். இம்மாணவ/ மாணவிகள் அதிகக் கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் கல்வி பயில மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், அரசுக் கல்லூரிகளில் 2021-22-ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவியர்களின் நலன் கருதி 2021-22ஆம் கல்வியாண்டில் கூடுதலாகத் தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு 25% கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25% கூடுதலாகவும் மாணவ மாணவியர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவைப் பரிசீலித்த அரசு, 2021- 22ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டிற்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 25% கூடுதலாகவும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 25% கூடுதலாகவும் மாணவ மாணவிகளைச் சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.
கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிறது''.
இவ்வாறு அரசின் முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.