கோவை அரசு மகளிர் ஐடிஐயில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு எதிரில் மகளிருக்கான தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) இயங்கி வருகிறது. இங்குள்ள தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு மத்திய அரசின் சான்று வழங்கப்படுகிறது.
மேலும், அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தலா ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், 30 கிலோ மீட்டர் தொலைவு வரை இலவச பஸ் பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. பயிற்சியை நிறைவும் செய்யும் தருவாயில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.
இதுதொடர்பாக அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அ.ஹெலினா ஹம்ப்ளின் கூறியதாவது:
» கல்லூரிகளில் தேர்வெழுத கரோனா தடுப்பூசி அவசியம்: புதுவை ஆளுநர் தமிழிசை
» சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள்: கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஐடிஐ என்றால் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் நிலவுகிறது. ஆனால், ஐடிஐ முடித்தவர்களுக்குதான் வேலைவாய்ப்பில் அதிகத் தேவை உள்ளது. தொழிற்பயிற்சி முடித்தவர்களைத்தான் நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றன.
கடந்த ஆண்டு பயிற்சி முடித்த மாணவிகளில் 71 சதவீதம் பேருக்கு உடனடியாக வேலை கிடைத்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற்றுத்தருவதோடு நாங்கள் விடுவதில்லை. பணியில் சேர்ந்த பின்பு 3 ஆண்டுகள் அவர்கள் அந்த வேலையில் தொடர்கிறார்களா எனத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். இதற்காகப் பிரத்தியேகமாக வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளார்.
இரண்டு ஆண்டு பயிற்சிகளான இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி- சிஸ்டம் மெயின்டனன்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, மெடிக்கல் எல்க்ட்ரானிக்ஸ் டெக்னீஷியன் பயிற்சிகளில் சேர பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓராண்டு பயிற்சிகளான டெஸ்க்டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அண்ட் புரோகிராமிங் அசிஸ்டென்ட், பேஷன் டிசைன் டெக்னாலஜி, 6 மாத காலப் பயிற்சியான ஸ்மார்ட் போன் டெக்னாலஜி- ஆப் டெஸ்டர் பயிற்சிகளில் சேர 10-ம் வகுப்பும், ஸ்விங் டெக்னாலஜி பயிற்சியில் சேர 8-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
இந்தப் பயிற்சிகளில் சேர மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்க நவீன இயந்திரங்கள் இங்குள்ளன. அனைவரும் தனித்தனியாகப் பயன்படுத்தும் வகையில் ஒரு கணினி ஒதுக்கப்படுகிறது. அதை 8 மணி நேரம் தினமும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். மகளிர் பயிற்சி மையம் என்பதால், அவர்களுக்குப் போதிய அளவு கழிப்பறைகள் உள்ளன. மாநகராட்சி மூலம் குடிநீர் அளிக்கப்படுகிறது. இங்கு 90 சதவீதம் மகளிர் பயிற்றுநர்கள்தான் பயிற்சி அளிக்கின்றனர். பாதுகாப்புக்காக, பயிற்சி மைய வளாகம் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
2021-ம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 15-ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன. வேலைநாட்களில் தினமும் காலை 10 மணி முதல் பெறப்படும் விண்ணப்பங்களின்படி சேர்க்கை நடைபெறும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9499055692, 9865128182, 9443429953 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு முதல்வர் அ.ஹெலினா ஹம்ப்ளின் தெரிவித்தார்.