மாணவர்கள் குடும்பத்துக்கு கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய ஆசிரியர்கள்: மதுரையில் நெகிழ்ச்சி

By கி.மகாராஜன்

மதுரை புது தாமரைப்பட்டி சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினர்.

கரோனா காரணமாக ஓராண்டுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இடையில் உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் இயங்கின. எனினும் தொடக்கப் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை.

இந்நிலையில், மதுரை அருகே புது தாமரைப்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினர்.

பள்ளித் தலைமை ஆசிரியர் பிரியா ஜெயச்சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளியின் பயிலும் மாணவ, மாணவிகள் 150 பேரின் குடும்பத்தினருக்குத் தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை கரோனா நிவாரணமாக வழங்க முடிவு செய்தனர்.

கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் பிரியா ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்லம் முன்னிலை வகித்தார். புது தாமரைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கே.எஸ்.எம்.ஆனந்தகுமார் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் துரை கணேசன், சந்தான கிருஷ்ணன், ராமமூர்த்தி, துரை செழியன், ஜெயக்குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE