கரோனாவால் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் எண்ணிக்கை: காலிப் பணியிடங்களை நிரப்பி, நிதியை அதிகப்படுத்துமா அரசு?

By செ.ஞானபிரகாஷ்

கரோனாவால் கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. இதனால் பல அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்குக் கூட்டம் அலைமோதும் நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை எழுந்துள்ளது.

புதுச்சேரியில் 283 அரசுப் பள்ளிகளும், 32 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. 181 தனியார் பள்ளிகள் உள்ளன. மொத்தமுள்ள 57 சதவீத அரசுப் பள்ளிகளில் 32 சதவீத மாணவர்களே படிக்கின்றனர். மேலும், அரசுப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். எனினும் தனியார் பள்ளிகளில்தான் அதிக அளவில் குழந்தைகள் படித்து வந்தனர்.

தமிழகத்தை விடப் புதுச்சேரியில் கல்விக் கட்டணம் தனியார் பள்ளிகளில் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அவற்றின் கல்விக் கட்டணத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் தொடர்ந்து தனியார் பள்ளிகளையே நாடினர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித்துறை, பெரும்பாலும் கண்டுகொள்ளாமல்தான் இருந்தது.

இச்சூழலில் கரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைனில்தான் வகுப்புகள் நடக்கின்றன. ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுப் பொதுமக்கள் போதிய வருமானமின்றித் தவிக்கின்றனர். இந்நிலையில் இரண்டாவது அலையின் தாக்கம் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் பலர் தவிக்கின்றனர்.

இந்நிலையில் இரண்டாம் அலை கரோனா குறையத் தொடங்கியதால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் பலர் தனியார் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் தங்கள் மாணவர்களை, அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகளில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர். பல பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கக் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்கவரும் பெற்றோருக்கு மாற்றுச் சான்றிதழ் தராத சூழலும் ஏற்பட்டது. இதையடுத்து 7-ம் வகுப்பு வரை மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளில் சேரலாம் என்றும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நகரப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கி பல பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க கூட்டம் அலைமோதுவதைப் பார்க்க முடிந்தது. அதிக அளவில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளதாகவும் பள்ளிகள் தரப்பில் குறிப்பிடுகின்றனர். எவ்வளவு குழந்தைகள் நடப்பாண்டில் இணைந்துள்ளனர் என்பதைச் சேர்க்கைக்குப் பிறகே தெரிவிக்க இயலும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக்குக் கூட்டம் அலைமோதும் நிலையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்த கல்வி சார்ந்த பணிகளில் இயங்கும் சமூக அமைப்பினர் கூறுகையில், "கரோனா சூழலைத் தொடர்ந்து பலரும் பொருளாதார பாதிப்பினால் அரசுப் பள்ளிகளை நாடத் தொடங்கியுள்ளனர்.

புதுச்சேரியில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்விக்கான நிதியை அரசு வரும் கல்வியாண்டில் அதிகப்படுத்த வேண்டும். புதுச்சேரியில் மிகக் குறைவாகவே நிதி ஒதுக்குவதை மாற்ற வேண்டும். பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், தேவையான பாட ஆசிரியர்கள், இசை, ஓவியம் போன்ற கலை ஆசிரியர்கள் இல்லை. நீண்ட விடுப்பில் போகும் ஆசிரியர்களுக்கு மாற்று ஆசிரியர்கள் இல்லை. முக்கியமாக 10, 11, 12-ம் வகுப்புகளில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் ஆசிரியர்கள் பணியிடங்களை உறுதிப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE