பிளஸ் 2 மாணவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு

பிளஸ் 2 மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறாததால் 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைக்குக் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கிடையே தமிழகத்திலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மதிப்பெண் கணக்கிடும் முறை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களும், 10 நாட்களுக்குள்ளாக மதிப்பெண் கணக்கீட்டு முறையை இறுதி செய்து உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அக மதிப்பீட்டு முறையை இறுதி செய்து, ஜூலை 31-ம் தேதிக்குள் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதையடுத்து பிளஸ் 2 மாணவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ''பிளஸ் 2 மாணவர்கள் அவர்களின் 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களைச் சரிபார்த்து நாளை (ஜூன் 24) முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். குறிப்பாக http://ww.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்'' என்று அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண் பட்டியலை மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரிடமும் வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE