கரோனாவால் மொபைலில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்கள்: தேடிச் சென்று புத்தகங்களை வழங்கும் தஞ்சை இளைஞர் 

கரோனா ஊரடங்கால் மொபைலில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் விதமாக, வீடு வீடாகச் சென்று புத்தகங்களை வழங்கி வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டும் தஞ்சாவூர் இளைஞரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ - கமலா தம்பதியினர். இவரது மகன் சதீஸ்குமார் (31). இவர் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். புத்தகப் பிரியரான இவர், சுமார் 700க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கிச் சேகரித்து, தனது வீட்டு மாடியில் 'செம்மொழி வாசிப்பகம்' என்ற பெயரில், சிறிய அளவிலான நூலகத்தை வைத்துள்ளார். இந்த நூலகத்தில், அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்டம், இலக்கியம், சிறுகதைகள், போட்டித் தேர்வுகள் ஆகியவற்றுக்கான புத்தகங்கள் உள்ளன.

இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இளைஞர்கள், சிறுவர்கள் மொபைலில் மூழ்கி, பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுகின்றனர். இதையடுத்து சதீஸ்குமார், சிறுவர்கள், இளைஞர்களின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றப் புதிய முயற்சியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகத்தைக் கொடுத்து, படிக்கச் சொல்லி வருகிறார். இவரின் செயலைக் கிராம மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சதீஸ்குமார் கூறுகையில், ''கல்லூரி நாட்களில் புத்தகங்களைப் படிக்கும் நிலையில், நிறையப் புத்தங்களை வாங்கிக் குவித்தேன். அந்தப் புத்தகங்கள், குப்பைகள் போல மூலையில் முடங்கிக் கிடந்தன. அதைத் தூசி தட்டி, நுாலகத்தை உருவாக்கினேன். பலரும் நூலகத்துக்கு வந்து படித்துச் சென்றனர். கரோனா காரணமாகப் புத்தகங்களை நானே தேடிச் சென்று கொடுத்து, படிக்க வைக்கிறேன். ஒரு சிலர் வீட்டிற்கு வந்து தேவையான புத்தங்களைப் படிக்கின்றனர். எனது கிராமத்தில் முன்மாதிரியான ஒரு நுாலகத்தை உருவாக்கத் திட்டமிட்டுளேன்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE