கோவை கணுவாயில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் எம்.சந்தோஷ் (14). இவர் 25 கோன்களுக்கு இடையில் வேவ் போர்டில் சறுக்கியபடி, 1 நிமிடத்தில் 3 பந்துகளைச் சுழற்றி (ஜக்லிங்) 150 முறை பிடித்து, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து மாணவர் எம்.சந்தோஷ் கூறியதாவது:
''கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 10 மாதங்களாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளிக்குச் செல்லவில்லை. பாடங்களையும் படிக்க முடியவில்லை. இந்நிலையில் என்னுடைய அப்பா மகேந்திரன், 3 பந்துகளை இரு கைகளில் மாற்றி, மாற்றிப் பிடித்து, ஜக்லிங் செய்வார். எனக்கு இது மிகவும் பிடித்துப் போனது. அதை எனக்கும் கற்றுத் தருமாறு கேட்கவே, அப்பா எனக்குப் பயிற்சி அளித்தார்.
சுமார் 4 மாதங்களில் 3 பந்துகளை இரு கைகளில் மாற்றி மாற்றி, கீழே விழாமல் பிடிக்கக் கற்றுக் கொண்டேன். இதையடுத்து இரு சக்கரங்கள் கொண்ட வேவ் போர்டில் நின்று கொண்டு, 3 பந்துகளையும் பிடித்துக் கொண்டே, கோன்களுக்கு இடையில் சறுக்கிச் செல்லப் பயிற்சி எடுத்தேன்.
» பள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு
» காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை: கல்லூரி மாணவரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
இதன் தொடர்ச்சியாக, 25 கோன்களுக்கு இடையில் வேவ் போர்டில் சறுக்கியபடி, 1 நிமிடத்தில் 3 பந்துகளை ஜக்லிங் செய்து 150 முறை பிடித்தேன். இந்த சாதனை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
4 பந்துகளை ஜக்லிங் செய்து பிடித்தவாறே, வேவ் போர்டில் சறுக்கிக் கொண்டு செல்வதற்குப் பயிற்சி எடுத்து வருகிறேன். இது கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்''.
இவ்வாறு மாணவர் எம்.சந்தோஷ் கூறினார். பேட்டியின் அவரது தந்தையும், பயிற்றுநருமான மகேந்திரன் உடன் இருந்தார்.