காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை: கல்லூரி மாணவரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

By இ.மணிகண்டன்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 4,000 கிலோ மீட்டர் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தைக் காஷ்மீர் கல்லூரி மாணவர் மேற்கொண்டுள்ளார். இன்று காலை விருதுநகர் வந்த அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஷ்மீரைச் சேர்ந்தவர் மேனன் ஹாசன் (23). அங்கு உள்ள ஒரு கல்லூரியில் பிசிஏ இறுதியாண்டு படித்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக முடங்கிப்போய் உள்ள இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு மற்றும் அன்பை வலியுறுத்தியும் ஜனவரி 1-ம் தேதி காஷ்மீரில் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார்.

ஹாசன், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா வழியாக தமிழ்நாடு வந்துள்ளார். தற்போது விருதுநகர் வந்துள்ள மேனன் ஹாசனுக்குப் பல்வேறு அமைப்பினர் வரவேற்பளித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், ''இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடையே அன்பை வளர்க்கவும் இந்த பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இன்று மாலை கன்னியாகுமரி சென்றடைந்தது எனது 27 நாட்கள் விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை முடிக்க உள்ளேன்'' என்று தெரிவித்தார்.

சைக்கிள் வீரரான ஹாசன், பல்வேறு சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE