ஹரியாணாவில் நடைபெற உள்ள சர்வதேச கீதை மகோத்சவத்தில் 55 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பகவத் கீதையின் 19 வசனங்களை ஒரே நேரத்தில் ஒப்பிக்கவுள்ளனர்.
ஆண்டுதோறும் ஹரியாணா மாநிலம் குருஷேத்ரம் பகுதியில் சர்வதேச கீதை மகோத்சவம் நடைபெறும். இதில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கீதை வசனங்களை ஒப்புவிப்பர். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் ஒன்றுகூட உள்ளனர்.
டிசம்பர் 17 முதல் 25 ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் குருஷேத்ரம் பகுதியில் இருந்து 9 ஆயிரம் மாணவர்களும் மாநிலத்தில் 21 மாவட்டங்களில் இருந்து 46 ஆயிரம் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் டிச.25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஒன்றிணைந்து வசனங்களை ஒப்பிக்க உள்ளனர்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது. மேல்நிலைக் கல்வி இயக்குநர் இதுகுறித்து அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் கடித எழுதியுள்ளார். அதில், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களும் பள்ளி முதல்வர்களும் இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா விதிமுறைகள் காரணமாக அனைத்துப் பள்ளி சார்ந்தபோட்டிகளும் ஆன்லைனில் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.