மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவு 

சென்னையில் நடைபெற்று வரும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நவ.18-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23,707 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,276 பேரும் இடம்பெற்றனர்.

இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு முதலில் 3 நாட்களுக்கு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்புப் பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நவம்பர் 23-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

புயலால் தள்ளி வைக்கப்பட்ட கலந்தாய்வு

இதற்கிடையே நிவர் புயல் காரணமாக 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, தள்ளி வைக்கப்பட்ட பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நவ.30-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்க 591 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 459 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். தகுதியான 191 பேருக்குக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டது. 266 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

அரசு ஒதுக்கீட்டுக்கான 529 எம்பிபிஎஸ், 988 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கான 1,517 இடங்களுக்கான இறுதி நாள் கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது.

எஸ்சி பிரிவில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE