சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் மார்ச் 15 முதல் தொடங்க உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக சிபிஎஸ்இ பள்ளி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே, பொதுத் தேர்வுகளை நடத்தும் தேதிகள் குறித்து இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. தேர்வுகள் ஆன்லைன் மூலமாக அல்லாமல் எழுத்துபூர்வமாகவே நடைபெறும். அனைத்து கோவிட் விதிமுறைகளையும் பின்பற்றியே தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ சார்பில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மார்ச் 15 முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதாக, தேர்வுக்கால அட்டவணை வெளியானது.
» முதன்முதலாக ஆன்லைன் பிஎஸ்சி படிப்பு: ஐஐடி சென்னையில் படிக்க 8,154 மாணவர்கள் தேர்வு
» நீட் 2021 ரத்து செய்யப்படுமா?- மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் இந்தத் தகவலை அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் (Press Information Bureau) போலி என மறுத்துள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ள பிஐபி, ''2020 - 21ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு குறித்து சிபிஎஸ்இ பெயரில் வெளியாகியுள்ள தேர்வுக்கால அட்டவணை போலியானது. பெற்றோர்களும் மாணவர்களும் இதை நம்ப வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளது.