சிபிஎஸ்இ 2021 பொதுத் தேர்வு விண்ணப்பம்: தனித் தேர்வர்களுக்குக் கால அவகாசம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

சிபிஎஸ்இ 2021 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு அடுத்த ஆண்டு (2021) பொதுத் தேர்வுக்காக விண்ணப்பிக்க நவ.11-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தாமதக் கட்டணத்துடன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நவ.21-ம் தேதி கடைசி நாளாக இருந்தது.

இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்களும் பெற்றோர்களும் சிபிஎஸ்இ வாரியத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு 2021 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் புதிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, டிசம்பர் 9-ம் தேதிக்குள் அவற்றை சிபிஎஸ்இ இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம். ஏற்கெனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, அதில் திருத்தம் செய்ய விரும்புவோர் டிச.10 முதல் டிச.14-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் குறித்து இதுவரை தேதிகள் அறிவிக்கப்படாத நிலையில், தேர்வுகளை மே மாதம் வரை தள்ளிவைக்க வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: cbse.nic.in.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE