முதுகலை இறுதியாண்டு மாணவர்களைத் தவிர பிற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களைக் கல்லூரி நிர்வாகங்கள் எக்காரணம் கொண்டும் நேரில் அழைக்கக் கூடாது என்று உயர் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா பரவல் காரணமாகக் கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன இந்த நிலையில் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் முதுகலை இறுதியாண்டு மாணவர்ளுக்குகல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் 8 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் சில கல்லூரி நிர்வாகங்கள், பிற ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களையும் கல்லூரிகளுக்கு வரவேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து உயர் கல்வித்துறை தரப்பில் கூறும்போது, அரசு முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற ஆண்டு மாணவர்களைக் கல்லூரி நிர்வாகங்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டுமெனக் கட்டாயப்படுத்தக் கூடாது.
எனினும் அவ்வாறு மாணவர்களைக் கல்லூரிக்கு வரவழைப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.