தொழிலாளர்களுக்குத் தோள் கொடுக்கும் திட்டங்கள்!

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

தொழிலாளர்கள் ஒரு நாட்டின் இதயத்தைப் போன்றவர்கள். அவர்கள் நலமுடன் இருந்து உற்சாகத்துடன் பணியாற்றுவதைப் பொறுத்தே ஒரு நாட்டின் பொருளாதாரம் உயரும். அந்த வகையில் தொழிலாளர்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு தீட்டி வருகிறது.

கூலித்தொழிலாளிகள், சுமை தூக்குவோர், கட்டட தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் எனப் பல்வேறு பிரிவினருக்கும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் அல்லது கட்டுமான நல வாரியத்தில் முதலில் உறுப்பினர்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே உறுப்பினராக இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இந்த வாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கு எவ்வித பதிவுக் கட்டணமும் செலுத்த தேவையில்லை

அமைப்புசாரா நல வாரியம் மற்றும் கட்டுமான நல வாரியம் மூலம் பின்வரும் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

உறுப்பினரின் மகள் அல்லது மகன் 10-ம் வகுப்பு படிக்கும்போது ரூ.1,000. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.1,000

ப்ளஸ்-1 படிக்கும்போது ரூ.1,000. ப்ளஸ்-2 படிக்கும்போது ரூ.1,500. ப்ளஸ்-2 தேர்ச்சி பெற்றால் ரூ.1,500

கலை அறிவியல் பட்டப் படிப்பும் படித்தால் ரூ.1,500. விடுதியில் தங்கிப் படித்தால் ரூ.1,750

முதுகலை பட்டப் படிப்பு படித்தால் ரூ.4000. விடுதியில் தங்கிப் படிப்பின் ரூ.5,000

மருத்துவம், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்பப் பட்டப் படிப்பு படித்தால் ரூ.4,000. விடுதியில் தங்கி படித்தால் ரூ.5,000

முதுநிலை தொழில்நுட்ப படித்தால் ரூ.6,000. விடுதியில் தங்கி படித்தால் ரூ.8,000

ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படித்தால் ரூ.1,000. விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200

மகளின் திருமணத்திற்கு ரூ.5000 உதவித் தொகை. மகனின் திருமணத்திற்கு ரூ.3000

மகப்பேறு உதவித்தொகை ரூ.3000

உறுப்பினர் அகாலமாக மரணம் அடைந்தாலோ, வேலை செய்ய முடியாத அளவுக்கு உடல் உறுப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டால் ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை

இயற்கை மரணத்திற்கு ரூ.15,000

60 வயது ஆகிய உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம். குடும்ப ஓய்வூதியம் ரூ.400

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலமாக அரசு வழங்கும் உதவித் தொகைகள் மற்றும் வாரியத்தில் உறுப்பினராக சேருவது குறித்தும் பெரும்பாலான தொழிலாளர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிலாளர் சமூக பாதுகாப்புக்கென தனியாக தொழிலாளர் நல அதிகாரி அலுவலகங்கங்கள் செயல்படுகின்றன. இந்த அலுவலகங்களை நேரடியாக அணுகி தொழிலாளர்கள் பயன்பெறலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE