சமூக வலைத்தளங்களில் தேச விரோத செயல்களை அனுமதிக்கக் கூடாது: பிரதமர்

By செய்திப்பிரிவு

முஸாஃபர்நகர் வன்முறையை மேற்கோள்காட்டிய பிரதமர் மன்மோகன் சிங், "தேச விரோத சக்திகள், சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது" என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார்.

தில்லியில் இன்று காலை தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "முஸாஃபர்நகர் வன்முறையால் பெருமளவு உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக, காஷ்மீரிலும் அஸாமிலும் வகுப்புவாத வன்முறைகளைப் பார்க்கிறோம்.

இத்தகைய வன்முறைகளைத் தடுப்பதற்கு, மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்நகர் கலவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, அவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பிரதமர் உறுதியளித்தார்.

முஸாஃபர்நகரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பழைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், "தேச விரோத சக்திகள், சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. சமூக வலைத்தளங்கள் என்பது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கானது. அதில், நம் சுதந்திரத்தை சுயகட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் பேணுவதற்கே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும்" என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

மோடி புறக்கணிப்பு...

தில்லியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களிலும் மத நல்லிணக்கத்தைப் பேணிக்காப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்நகரில் நிகழ்ந்த வகுப்பு கலவரத்தையடுத்து மத்திய அரசு அழைப்புவிடுத்திருந்த இந்தக் கூட்டத்தை, குஜராத் முதல்வர் மோடி புறக்கணித்தார். இக்கூட்டத்தில், பாஜக முதல்வர்களில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE