வால்பாறையில் பயன்பாட்டுக்கு வந்த படகு இல்லம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

வால்பாறை: வால்பாறையில் புதிதாக அமைக்கப்பட்ட படகு இல்லம் கோடைவிழாவை முன்னிட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறைக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் படகு இல்லம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.

படகு இல்லம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் கோடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான உதகமண்டலம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி நடத்தப்படுகிறது. அதேபோல் வால்பாறையிலும் படகு சவாரி தொடங்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது.

தற்போது படகு இல்லம் திறக்கப்பட்டு படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லத்தில் 15 கால்மிதி படகு, 2 துடுப்பு படகு என மொத்தம் 17 படகுகள் இயக்கப்படுகின்றன. கோடைவிழா நடைபெறும் 3 நாட்கள் பொதுமக்கள் கட்டணமில்லாத பயணம் மேற்கொள்ளலாம்,’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE