கன்னியாகுமரி படகு இல்லத்தில் இருந்து வட்டக்கோட்டைக்கு சொகுசு படகு சவாரி தொடக்கம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறுகிறது. விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் இயற்கையாகவே கடலின் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால், திருவள்ளுவர் சிலை படகு தளத்தில்ஆழம் குறைவாகவும், படகுநிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால்கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு மட்டும்படகு போக்குவரத்து நடைபெறுகிறது.

திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கப்படுவதில்லை. அப்போது சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே,விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கமுடிவு செய்யப்பட்டது.

கூண்டு பாலம் 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். பாலம் அமைக்கும் பணி மற்றும்ரூ.20 கோடி மதிப்பில் விவேகானந்தர் பாறை பயணியர் படகு தளத்தை விரிவுபடுத்தும் பணியை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர் எ.வ.வேலு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இதேபோல் கன்னியாகுமரி படகு இல்லத்தில் இருந்து வட்டக்கோட்டைக்கு சொகுசு படகுசவாரியும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. படகு சவாரியை தொடக்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, “கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் திருவள்ளுவர், தாமிரபரணி என்ற பெயர் கொண்ட சொகுசு படகுகள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

தாமிரபரணி நவீன சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 75 சுற்றுலா பயணிகள்அமரும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சொகுசு படகில் குளிர்சாதன வசதியுடன் 19 இருக்கைகளும், 131 சாதாரண இருக்கைகளும் உள்ளன. குளிர்சாதன இருக்கையில் பயணம் மேற்கொள்ள ஒரு நபருக்குரூ.450, சாதாரண இருக்கையில் அமர்ந்து பயணம் மேற்கொள்ள ஒரு நபருக்கு ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்விரண்டு படகுகளும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்தில் இருந்து புறப்பட்டு சின்ன முட்டம் வழியாக வட்டக்கோட்டை கடல் பகுதியை சென்றடைந்து, ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தளத்துக்கு வந்து சேரும். சுற்றுலா பயணிகளுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE