உதகை: கோடை சீசனையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, உதகையிலுள்ள கர்நாடக தோட்டக்கலைத் துறை பூங்கா அருகே உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பலூன் திருவிழா நேற்று தொடங்கப்பட்டது. ஒருமுறை 3 பேர் பயணம் செய்யலாம். ஒருவருக்கு ரூ.1600 கட்டணம் வசூலிக்கப்படும். 5 முதல் 10 நிமிடங்கள் பயணம் செய்துவிட்டு இறங்கலாம், என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தொடக்க விழாவில் பங்கேற்று சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, "சோதனை முயற்சியாக இந்த ஆண்டு பலூன் திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக அமைந்தால், அதிக பலூன்கள் கொண்டுவரப்பட்டு பொள்ளாச்சி பலூன் திருவிழாபோல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது" என்றார். மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.