தமிழகத்துக்கு கடந்த 3 மாதங்களில் 6.68 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்துக்கு கடந்த 3 மாதங்களில் 6.68 கோடி சுற்றுலாப் பயணிகள் வந்ததாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில், சுற்றுலா வளர்ச்சி நடவடிக்கைகள், மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ராமச்சந்திரன், அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதேபோல, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள சுற்றுலா திட்டப் பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்து, டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ சுற்றுலா மாநாட்டுக்குப் பிறகு, மாநிலத்துக்கு வரும் மருத்துவ சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவுக்குப் பிறகு, 2021-ல் 57,622-ஆக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022-ல் 4,07,139-ஆக உயர்ந்து. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் மட்டும் 2,67,773 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.

இதேபோல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 11.53 கோடியாக இருந்தது. இது 2022-ல் 21.86 கோடியாக உயர்ந்தது. நடப்பாண்டில் மார்ச் மாதம் வரையிலான 3 மாதங்களில் 6.65 கோடி சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 6.68 கோடி பேர் தமிழகத்துக்கு வந்துள்ளனர்.

கோடை விடுமுறையில் உதகை, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய மலைப்பகுதி சுற்றுலாத் தலங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இவ்வாறு சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், சுற்றுலாத் துறை பொது மேலாளர் லி.பாரதிதேவி, திட்டப் பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE