மாமல்லபுரம்: கோடை விடுமுறையையொட்டி நேற்று மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் கலைச்சின்னங்களான அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்டவைகள் அமைந்துள்ளன. இவற்றை கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோடை விடுமுறையையொட்டி மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினமான நேற்று அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால், கலைச்சின்ன வளாகங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. கூட்டம் அதிகரித்ததால் போலீஸார் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.