கொடைக்கானலில் மே 26-ல் மலர் கண்காட்சி, கோடை விழா தொடக்கம்

By செய்திப்பிரிவு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 26-ம் தேதி தொடங்கி ஜூன் 2 வரை நடைபெற உள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் ரா.ராஜா தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 60-வது மலர்க் கண்காட்சி மே 26-ல் தொடங்கி மே 28 வரை நடைபெற உள்ளது. இதேபோல், கோடை விழா மே 26-ல் தொடங்கி ஜூன் 2 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. மலர்க் கண்காட்சியை முன்னிட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் பிரையன்ட் பூங்காவில் பல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கண்காட்சி மற்றும் கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. தொடக்க விழாவில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி உடன் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE