சென்னை: வண்டலூர் பூங்காவில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை தினமும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு வருகின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பராமரிப்பு பணிகளுக்காக பூங்கா மூடப்படும்.
கரோனா பரவல் குறைந்ததும் பூங்கா திறக்கப்பட்டாலும், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் காட்சியகம், இரவு நேரங்களில் விலங்குகளை பார்வையிடும் சேவை ஆகியன திறக்கப்படாமல் இருந்தன. பின்னர் படிப்படியாக அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால், சிங்கம் சஃபாரி எனப்படும், சிங்கங்கள் திறந்த வெளியில், இயற்கையான வாழிடங்களில் வசிப்பதை, பாதுகாப்பு வாகனங்களில் பார்வையாளர்களை அழைத்துச் சென்று பார்வையிடும் சேவை மட்டும் தொடங்கப்படவில்லை.
இதை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை பூங்கா நிர்வாகம் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த சேவை அமலுக்கு வரும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.