கோடை சீசனையொட்டி உதகை தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

உதகை: கோடை சீசனையொட்டி ரூ.17 லட்சத்தில் உதகை தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி, அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ரூ.17 லட்சம் செலவில் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் வகையில், பழங்கள் மற்றும் காய்கறிகள் வடிவிலான இருக்கைகள் அமைப்பது, நீர்வீழ்ச்சியை புதுப்பிப்பது போன்ற உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தாவரவியல் பூங்கா புல் மைதான பகுதியில் முதல்கட்டமாக ரூ.3 லட்சம் மதிப்பில் தர்பூசணி,பப்பாளி, பைன் ஆப்பிள், பாகற்காய், கேரட் ஆகிய வடிவங்களில் 6 இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நுழைவுவாயில் பகுதியிலுள்ள ஜப்பான் பூங்காவில் ரூ.7 லட்சம் மதிப்பில் ஜப்பானிய காஸிபோ எனப்படும் கோபுரம் மற்றும் மீன் வடிவிலான பல வண்ண மீன் காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் மலர் கண்காட்சிக்கு முன்பு விரைந்து முடிக்கப்படும் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE