“தீர்த்தகிரீஸ்வரர் கோயிலை உலகறியச் செய்திடுக” - மக்களவையில் செந்தில்குமார் எம்.பி. வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அரூர் தாலுக்கா தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலை யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மிக வளர்ச்சி திட்டத்தில் (பிஆர்ஏஎஸ்ஏ) உலகறிய செய்ய வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.யான செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து தருமபுரி நாடாளுமன்ற எம்பியான செந்தில் குமார் மக்களவையில் பேசியதாவது: தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் தீர்த்தமலை உள்ளது. இதில், கடந்த ஏழாம் நூற்றாண்டில் சோழ பாண்டிய மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட தீர்த்தகிரிஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதற்கான கல்வெட்டுகள் இன்றும் அக்கோயிலில் அடையாளங்களாக உள்ளன. ராஜராஜ சோழன் இக்கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்ததற்கான கல்வெட்டு அடையாளங்கள் இப்புனித தளத்தில் அமைந்துள்ளன .

தற்பொழுது இக்கோயிலுக்கு அப்பகுதியில் உள்ள மக்களும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என இக்கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூர் கலைகள் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சி மிகவும் அவசியம். எனவே, மிகவும் பழமை வாய்ந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயிலை யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மீக வளர்ச்சி திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் இதன்மூலம், தீர்த்தரீஸ்வரர் கோயிலின் புகழை உலகறிய செய்ய வேண்டும். இதை மத்திய சுற்றுலா அமைச்சகத்திடம் கோருகிறேன்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE